அதிமுகவின் பவர்ஃபுல் அமைச்சர் சி.விஜயபாஸ்கர்: சர்ச்சைகளும், தற்போதைய சைலண்ட் மோடு பின்னணியும்!
அதிமுக ஆட்சி காலத்தில் (2011 – 2021) சுமார் எட்டாண்டு காலம் புதுக்கோட்டை சி.விஜயபாஸ்கர் மிக சக்திவாய்ந்த அமைச்சராக வலம் வந்தார். சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த அவர் மீது குட்கா முறைகேடு, ஆர்.கே.நகர் பணப்பட்டுவாடா, வருமானத்துக்கு அதிகமாக சொத்துச் சேர்ப்பு, தனியார் மருத்துவக் கல்லூரிக்கு விதிமீறல் அனுமதி, கரோனா உபகரணங்கள் வாங்கியதில் முறைகேடு என அடுக்கடுக்கான சர்ச்சைகள் எழுந்தன. இத்தனை சர்ச்சைகளில் சிக்கியவர், தற்போது அரசியல் வெளியில் அதிகம் தென்படாமல் இருப்பது பல கேள்விகளை எழுப்பியுள்ளது.
அடுக்கடுக்கான புகார்களும், ஆமை வேக நடவடிக்கைகளும்!
2021 சட்டமன்றத் தேர்தலில், விஜயபாஸ்கருக்கு எதிரான இந்த பிரச்சினைகளை முன்வைத்தே திமுக தீவிர பிரச்சாரம் செய்தது. “கழக ஆட்சி வந்ததும் கம்பி எண்ண வேண்டியிருக்கும்” என முழங்கியது. ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு அதிரடி நடவடிக்கைகள் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நான்கு வருடங்கள் ஆகியும் பெரிய அளவில் எதுவும் நடக்கவில்லை என்பதே கள நிலவரம்.
- வருமானத்திற்கு மீறிய சொத்துக் குவிப்பு மற்றும் மருத்துவக் கல்லூரி அனுமதி முறைகேடு தொடர்பாக லஞ்ச ஒழிப்புத் துறையினர் இரண்டு முறை சோதனை நடத்தினர்.
- குட்கா முறைகேடு தொடர்பாக அமலாக்கத்துறையும், வருமான வரித்துறையும் கடந்த ஆண்டு மார்ச் மாதம் சோதனைகளை மேற்கொண்டன.
ஆனால், இந்த சோதனைகள் நடந்து பல வருடங்கள் கடந்தும், இவற்றின் மீதான மேல் நடவடிக்கைகள் என்ன ஆனது என்பது மர்மமாகவே உள்ளது. டெல்லிக்கே வெளிச்சம் இல்லை என்கிறார்கள் விவரமறிந்தவர்கள்.
அரசியல் நாகரிகமா அல்லது அட்ஜஸ்ட்மெண்ட் அரசியலா?
தொடர் ரெய்டுகளால் கலவரப்பட்ட விஜயபாஸ்கர், மத்திய – மாநில அரசுகளை பகைத்துக் கொள்ள விரும்பாமல் அமைதியானார். அதேசமயம், இதை ஆயுதமாக பயன்படுத்த வேண்டிய திமுகவும் மௌனம் சாதிப்பது அரசியல் வட்டாரத்தில் பல்வேறு யூகங்களை கிளப்பியுள்ளது. ஆச்சரியப்படும் விதமாக, திமுக ஆட்சியில் இருந்தாலும், விஜயபாஸ்கர் அரசு ஒப்பந்தங்களை எடுத்து சாலைகள் அமைப்பது, பாலங்கள் கட்டுவது என படுபிசியாக இருக்கிறார். தனது கல் குவாரி தொழிலும் தொய்வின்றி நடைபெற்று வருகிறது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் அமைச்சர்கள் எஸ்.ரகுபதி, சிவ.வீ.மெய்யநாதன் ஆகியோர் இருந்தும், அவர்கள் விஜயபாஸ்கரை விமர்சிப்பதில்லை. விஜயபாஸ்கரும் புதுக்கோட்டை அமைச்சர்களை எதுவும் பேசுவதில்லை. சமீபத்தில் விராலிமலை ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியில் அமைச்சர் ரகுபதியும் விஜயபாஸ்கரும் இணைந்து நிகழ்ச்சியை தொடங்கி வைத்ததும், அப்போது விஜயபாஸ்கர் ரகுபதியை “அப்பா” என அழைத்ததும் ‘அரசியல் நாகரிகத்தின்’ உச்சமாக பார்க்கப்பட்டது. இது என்ன மாதிரியான டீல் என அரசியல் பார்வையாளர்கள் குழம்பிப் போயுள்ளனர்.
தற்போது அதிமுக ஆலோசனைக் கூட்டங்களில் பிசியாக இருந்தாலும், பொது இடங்களில் அரசியல் பேசுவதை விஜயபாஸ்கர் குறைத்துக் கொண்டுள்ளார். பேசினாலும், “அடுத்து நம்ம ஆட்சிதான், எக்ஸ்ட்ராவா வேஷ்டி வாங்கி வெச்சுக்குங்க” என தொண்டர்களை உற்சாகப்படுத்துவதோடு நிறுத்திக் கொள்கிறார்.
விஜயபாஸ்கர் மீதான லஞ்ச ஒழிப்புத் துறை நடவடிக்கை குறித்து புதுக்கோட்டை வடக்கு மாவட்ட திமுக செயலாளர் கே.கே.செல்லப்பாண்டியன் கூறுகையில், “விஜயபாஸ்கர் மீதுள்ள லஞ்ச ஒழிப்புத் துறை வழக்கு விசாரணையில் உள்ளது. தகுந்த ஆதாரங்களுடன் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதால் அவரை சிறைக்கு அனுப்ப அந்த ஒரு வழக்கே போதுமானது. புதுக்கோட்டை நீதிமன்றத்தில் உள்ள இந்த வழக்கில் நிச்சயம் அவருக்கு தண்டனை கிடைக்கும். அது தெரிந்துதான் அவர்கள் வாய்தா மேல் வாய்தாவாக வாங்குகிறார்கள்” என்றார்.
“சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம் சொல்லிய வண்ணம் செயல்.” – திருவள்ளுவர்.
விஜயபாஸ்கர் மீதான வழக்குகள் நீதிமன்ற விசாரணையில் இருப்பதாகக் கூறப்பட்டாலும், அதன் இறுதி முடிவு எப்போது என்பது கேள்விக்குறியாகவே நீடிக்கிறது. ‘கம்பி எண்ணுவார்’ என்ற திமுகவின் தேர்தல் கால முழக்கம் என்னவானது? மக்கள் மன்றத்தில் இத்தகைய தாமதங்களும், அரசியல் நகர்வுகளும் கூர்ந்து கவனிக்கப்பட்டு வருகின்றன என்பதே தற்போதைய நிதர்சனம்.